"அன்னச் சின்னத்தில் போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு நாம் ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளோம். இந்த முடிவு எமது கட்சியின் ஏகோபித்த முடிவு. அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை."
- இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா 'அருவி' செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
"ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச தமிழ் மக்களின் பரம எதிரி. போர்க்குற்றச்சாட்டுக்கள் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. அத்துடன், அவரின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் நாம் எதிர்பார்த்த பல விடயங்கள் இல்லை. எனவே, அவரை எம்மால் ஆதரிக்கவே முடியாது.
ஆனால், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் நாம் எதிர்பார்த்த பல விடயங்கள் உள்ளன.
புதிய அரசமைப்பு, அதிகாரப் பகிர்வு, தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு உள்ளிட்ட தமிழ் மக்கள் நலன் சார்ந்த பல வாக்குறுதிகளை தேர்தல் விஞ்ஞாபனத்தில் சஜித் முன்வைத்துள்ளார்.
எனவேதான், சஜித்தை ஆதரிக்க இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு ஏகமனதாக முடிவெடுத்துள்ளது.
இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பேச்சு நடத்துவார். அதில் இணக்கப்பாடு எட்டப்பட்ட பின்னர் ஜனாதிபதித் தேர்தலில் பங்காளிக் கட்சிகளை உள்ளடக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அறிவிப்பார்" - என்றார்.